Saturday 30 May 2015

என் காதல் சொல்ல தேவையில்லை..-8

Episode-8
----------------

பூமி பட்டால் அவள் பாதம் நோகுமென்று ,மரங்கள் தமக்குள் கூடிப் பேசி ,அவள் வரும் பாதையில் பூக்கள் உதிர்த்தனவோ..மஞ்சள் மெத்தை விரிப்பு போலே பூக்கள் கிடந்த வழியில் ,அவளது வருகை பூவின் வருகையோ..

ஒரு வாரம் முன்பு வரை , இப்படித்தான் அவளை பார்க்கும் போதெல்லாம் கவிதைகளாய் கிறுக்கி வந்தான்....இன்றோ..அதோ வருகிறாள் அவள்..

மஞ்சள் சுடிதாரில் ,மஞ்சள் நிற பூ போல...அவனோ பார்த்தும் பார்க்காதது போல் சட்டென்று திரும்பிக் கொள்கிறான்.."மச்சி உன் ஆளு டா .." என்ற நண்பனின் வார்த்தைகள் காதில் விழாதது போல்..

கார்த்தி, தேவிக்கு நடுவுல அப்டி என்ன தான் நடந்திருக்கும்???ம்ம்...கதைன்னா சஸ்பென்ஸ் இருக்கணும்னு சிலர் சொன்னதால முதல்ல இத எழுதிட்டேன்..என் கூட வாங்க..ஒரு வாரம் முன்னாடி, அப்டி என்ன தான் நடந்துச்சுன்னு பார்த்துட்டு வருவோம்..

----------------------------

ஐந்து நிமிடங்களாய் காலிங் பெல் ஒலித்துக் கொண்டே இருந்தது..

ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள் தேவி..

"ஹே கார்த்தி..இதோ வர்றேன்.." என்றபடி கதவை திறந்தாள்..

அப்போது தான் குளித்திருப்பாள் போல் தெரிந்தது..தன் நீளமான கூந்தலை டவெலுக்குள் அடக்கி  வைக்க முயற்சித்துக்கொண்டிருந்தாள்...அணிந்திருந்தது சுடிதார் டாப் மட்டும் என்பதால் ,இரு புறமும் இருக்கும் சைடு ஓபன் வழியாக தொடை தெரியாமலிருக்க, ஒரு டவ்வலை இடையில் உடுத்திருந்தாள்..

"பாட்டி இல்லையா??" என்ற கார்த்தியிடம்,

"டெல்லி மாமா வீட்டுக்கு போயிருக்காங்கடா..உட்காரு...வந்துடுறேன்.." என்று சோபாவை காண்பித்துவிட்டு உள்ளே சென்றவள், தன் அறை கதவை தாழிட்டாள்..

தன் இடையில் இருந்த துண்டை அவிழ்த்துவிட்டு.,ஒரு கருப்பு நிற பேன்ட்டை அணிந்து கொண்டாள்..பின்னர்,தன் மேஜை மேலிருந்த பைலை எடுத்துக்கொண்டாள்..

வெளியே செல்ல முற்பட்ட போது தான் டிஜிட்டல் கேமரா கண்ணில் பட்டது..

"அட ..இத கார்த்தி கிட்ட காட்டவே இல்லையே.." என்று லேசாக முணுமுணுத்தபடி, கேமராவையும் கையில் எடுத்துக் கொண்டாள்..

ஹாலில் ஷோ கேஸ் பொம்மைகளை பார்த்தபடி அமர்ந்திருந்தான் கார்த்தி..

"இதோ பாருடா..இதான் லாஸ்ட் ..இன்னொரு முறை அசைன்மெண்டு எழுதி குடுன்னு என்கிட்டே குடுத்த கொன்னுடுவேன்.." என்றபடி பைலை நீட்டினாள்..

அவனுக்கொன்றும் அது புதிதில்லை..இது தான் லாஸ்ட் என்பது அவள் ஒவ்வொரு முறையும் சொல்லும் டயலாக் தான்..எனவே எப்போதும் போல், "ஓகே.ஓகே.." என்றபடி தலையாட்டினான்..

"அது என்ன??" அவள் கையில் இருந்த கேமராவை நோக்கி கை நீட்டினான்..

"உன் கிட்ட காட்ட தான் கொண்டு வந்தேன்..இரு.." என்றபடி சோபாவில் அவனருகே அமர்ந்து கொண்டாள்..

" இதோ பார்த்தியா..டெல்லி மாமா வீட்ல வச்சு எடுத்த போட்டோ.."

"ம்ம்..நல்லாருக்கு..ஆனா அந்த பாப்பாவ என்ன பண்ணின ??ஏன் அழுதுட்டிருக்க்கு??

"அது வந்து...அந்த பொண்ணுக்கு ஒரு குட்டி ட்ரைசைக்கிள் இருந்துச்சா..அதுல வந்து..நான் உட்கார்ந்து பார்த்தேனா..அவ சைக்கிள்ள நான் உட்கார்ந்தேன்னு அழ ஆரம்பிச்சுட்டா.."

"அடிப் பாவி..எரும மாடு மாதிரி வளர்ந்துட்டு குட்டி பாப்பா சைக்கிள்ள ..ஐயோ கடவுளே.." என்ற படி அவள் தலையில் லேசாக குட்டினான்..

அவனது மோதிரம் அவள் கூந்தல் மறைத்த டவ்வலில் சிக்கிக் கொண்டது..இழுத்த போது அவள், "ஆ...இரு ..இரு...: என்றபடி டவ்வலை அவிழ்த்தாள்..

இப்போது சிக்கலில் சிக்கியிருந்த கை என்னவோ விடுபட்டு விட்டது..மனம் தான் தாறுமாறாய் சிக்கிக் கொண்டது..

"அவள் ஈரக்கூந்தல் துவட்டி முடித்தாள் உதிர்ந்தன முத்துக்கள்.." கவிதை சொல்ல மனம் எத்தனித்தது..அவளை அசையாமல் பார்த்துக்கொண்டிருந்தான்..மனம் தன் நிலைப்பாட்டை விட்டு கொஞ்சம் நகர்ந்திருந்தது..

அவன் பார்வையை கவனித்தவள், தானும் சற்று குழம்பினாள்..அவன் அருகில் இருந்தபடியே வேறு ஏதாவது பேச நினைத்தவள் ,கொஞ்சம் உளறிவிட்டாள்..ஆம்..அதை அவள் சொல்லியிருக்க வேண்டாம்..

கார்த்தி..டெல்லி மாமா ஒரு சோப்பு குடுத்தாரு ..செம வாசன டா...இங்க பாரேன் என்று அவன் முகத்தருகே தன் கன்னத்தை நீட்டினாள்..

சோப்பு வாசனைய பாரு என்று தான் காதலிக்கும்  அழகுபதுமை கன்னத்தை நீட்டினால்..ஒரு நல்ல ஆண் மகன் முகர்ந்து பார்ப்பானா முத்தமிடுவானா ???

அவன் நிலைகுலைந்தான்..அடுத்த நொடி, அவன் இதழ்கள் அவளது கன்னத்தில் பதிந்தது..அதிர்ச்சியில் விலகியவளின் கைகளை பற்றிக் கொண்டான்..அவளது இதயம் படபடத்தது..நெற்றி வியர்த்தது...அவனோ இன்னும் நிதானத்திற்கு வந்ததாக தெரியவில்லை..அவள் வலது கையை மீண்டும் தன் இதழருகே கொண்டு சென்றான்..

அவன் கைகளை உதறி தள்ளியவள், சற்றும் யோசிக்காமல், அவன் கன்னத்தில் பளாரென்று அறைந்தாள்..
வேறேதோ உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவன், பூமிக்கு திரும்பினான்..இளமையின் வேகத்தில்,உணர்ச்சியின் பிடியில் சிக்கி தான் செய்ததை நினைத்து வருந்தினான்..

தன் இரு கைகளாலும் தன் முகத்தை ஒரு முறை துடைப்பது போல் பாவனை செய்து விட்டு, 

"சாரி" என்றான்..
அவளோ அவன் பேசுவதை கேட்க தயாராக இல்லை..

"ஜஸ்ட் லீவ்...இன்னொரு முறை என்கிட்டே பேசாத.." என்று திரும்பிக்கொண்டாள்..

அவனோ தலைகுனிந்தபடி, தன் செய்கையை நினைத்து தானே நொந்த படி, அவ்விடம் விட்டு நகர்ந்தான்..அசைன்மெண்ட் பைல் சோபாவிலேயே கிடந்தது..
---------------------------------
இதய திருட்டுக்கு முத்த தண்டனை என்பார்கள் ..இங்கே முத்தமே தண்டனையாக மாறிப் போனது..
"இன்னும் காதலை கூட சொல்லவில்லை, அதற்குள் கால காலமாய் இருந்த நட்பையும் கொலை செய்துவிட்டேனே.." என்று தன் அறையில் அமர்ந்து கண்ணீர் சிந்தினான்..

"நான் எப்டி..இப்டி.." என்று மீண்டும் மீண்டும் தன்னையே கேள்விகள் கேட்டு, தன்னை தானே வார்த்தைகளால் சித்ரவதை செய்து கொண்டான்..

அவன் ஒன்றும் பெண் பித்தன் இல்லை,காம வெறியனும் இல்லை..பாவம்..நொடிப் பொழுதின் உணர்ச்சி தடுமாற்றத்தால் ஏற்பட்ட விபரீதம் அது...மனிதன் தானே ..அதற்கு அவன் மட்டுமே காரணம் என்று குற்றம் சாட்டுவதில் நியாயமுமில்லை..

(தொடரும்...)

Saturday 25 April 2015

என் காதல் சொல்ல தேவையில்லை..-7

Episode -7
--------------



ரயிலில் அமர்ந்து கொண்டாள் ராதிகா..
கருநீல வண்ண டாப்பும் அதில் வெள்ளை பூக்களுமாய் ..அந்த ஆடையை பாதி மறைத்தபடி அவளது வெள்ளை துப்பட்டா அங்கும் இங்குமாய் அசைந்து கொண்டிருந்தது..

ஒரு கருப்பு துப்பட்டாவால் தன் கருவண்டு கண்களை மட்டும் தவிர்த்து மொத்த முகத்தையும் மூடிக் கொண்டிருந்தாள் ..

"அக்கா..ஐ ஆம் சாரி ..நான் ஒருத்தர காதலிக்கிறேன்..அவர் வேறு மதத்தை சேர்ந்தவர்..என்னால் வேறு யாரையும் திருமணம் செய்ய முடியாது ..நான் பைத்தியம் இல்லை..என்னை எந்த பேயும் பிடிக்கவுமில்லை..நான்  விரும்பி தான் அவரோடு போகிறேன் ..என்னை தேடாதீர்கள்..
தேங்க்ஸ் ..எல்லாத்துக்கும்..."

அக்கா என்னோட அந்த லெட்டெர படிச்சிட்டு என்ன நெனச்சிருப்பா??
ஒடுகாலின்னு நினைத்திருப்பாளோ ??அப்றோம் மாமா...கல்யாண செலவு மிச்சம்னு நெனச்சிருப்பார்..எப்டியோ என்ன தேட மாட்டாங்க..

ஒரு வழியா வந்துட்டோம் ஆனா......வாழ்க்கைய பாரு...வாழ்க்கைய பாரு அப்டிங்குறான் கண்ணன்..நான் அவன தானே வாழ்க்கையா நெனச்சேன்..அதனால தானே எத்தன முறை அவன் என்ன அசிங்கப்படுத்தினாலும் நான் பொருட்படுத்தல..இனிமே அவன் கிட்ட போய் என் காதலை சொல்ல தேவையில்லை..ஏன்னா நான் அவன எவ்ளோ லவ் பண்றேன்னு என்ன விட அவனுக்கு நல்லா தெரியும்..ஆனா ஒருவேளை அந்த பொண்ணு சொன்னது உண்மையா இருந்தா ..ஐயோ கடவுளே..."

இப்படி ஏதேதோ நினைத்தபடி திரும்பிய போது, ஒரு இளைஞன் அவளை உற்று பார்ப்பது புரிந்தது..

ஐந்தரை அடி இருக்கலாம்..ஒரு வட்டத்தை வரைந்து லேசாக தாடை பகுதியை மட்டும் தட்டையாக்கி, ஒரு முகம் வரைந்தால் எப்படி இருக்குமோ அப்படித் தான் அவனும் இருந்தான்..கண்ணில் கண்ணாடி ..நீல நிற ஜீன்ஸ் ,செக்டு ரெட் ஷர்ட்..அழகன் தான்..

அவன் பார்வை அவள் மேல் பதிந்திருந்தது..சில ஆண்களுக்கோர் பழக்கம் உண்டு ..ஒரு பெண்ணின் முகத்தை  பார்ப்பதற்கு முன் அவள் பாதங்களை பார்ப்பது..

அவள் என்றோ காலில் வைத்த மருதாணி,நகம் வளர்ந்ததால் இப்போது பிறை வடிவில் இருந்தது..அவன் முதலில் பார்த்ததென்னவோ அவள் பாதங்களை தான்..இப்போது அவள் முகத்தை பார்க்கும் ஆவல் அவனுக்குள் மிகுந்திருந்தது..

"சீ..என்ன மனுஷன் இவன்..பொறுக்கி..பொம்பளைய பார்த்ததில்லையா?..என்ன சமூகம் இது?? பெண்ணை கண்டால் பேயும் இரங்குமாம்..பெண் உருவில் பேயே வந்தால் பேய்க்கும் இங்கே ஆபத்து தான்....பேயை விட கொடியவர்கள் வாழும் பூமி..

ஒரு பெண்ணை ஆறு பேர் சேர்ந்து..ஐயோ கடவுளே ..எனக்கு ஏன் இப்டி எல்லாம் தோணுது???நான் என் கண்ணனுக்கு மட்டும் தான் சொந்தம்..உயிரோடு இருந்தால் தானே கண்ட கண்ட நாயெல்லாம் நம்மை பார்க்கும் ..இல்லாம போயிட்டா..

ம்ம்...அதான் சரி..இப்டியே இல்லாம போயிடுவோம்..
என் கண்ணனுக்கு நான் வேண்டாம்...எனக்கு யாரும் வேண்டாம்..இந்த பூமியில் நான் வாழவும் வேண்டாம்.."

என்று உள்ளூர எண்ணியவள்..வெடுக்கென எழுந்தாள்..அந்த ரயில் பெட்டியின் கதவருகே சென்று நின்று கொண்டாள்..

"அம்மா...நான் உன்கிட்ட வரப்போறேன்.."என்று மனதுக்குள் முணுமுணுத்தபடி, குதிக்க முற்பட்டாள்..


"ஆ......."

(தொடரும்)

Sunday 5 April 2015

என் காதல் சொல்ல தேவையில்லை-6


Episode-6
------------------


திருவானைக்காவல்..இந்த கோயில்ல தான் சிலந்தியும் யானையும் ஈசனை வணங்கி முக்தி பெற்றதாம்..தெரியுமா உனக்கு ?" என்ற கார்த்தியிடம் ,

அதெல்லாம் தெரியும்..ஆனா உங்க அம்மா நீ பிரெண்ட்சொட கிரௌண்ட் க்கு போயிருக்குறதா சொன்னாங்க..அப்றோம் எப்டி இங்க??" ஒரு மெல்லிய புன்னகையோடு பதில் கேள்வி கேட்டாள் தேவி..

"ஏன் ..நீங்கெல்லாம் தான் கோயிலுக்கு வரலாமா??நாங்க வந்தா தரிசனம் தர மாட்டேன்னு சொல்லி சாமி கண்ண மூடிக்குமா?"
என்றவன் அவள் முகத்தின் போக்கை கவனித்ததால் 

"உன்ன பார்க்க தான் வந்தேன்"என்ற மனதின் வார்த்தைகளை விழுங்கி விட்டு "வா..கால் வலிக்குது..அங்க உக்காந்துக்கலாம்.." என்றான்..

கோயில் வளாகத்தின் மண்டபம் ஒன்றில் இருவரும் அமர்ந்து கொண்டனர்..

அவள் பச்சை நிற பட்டு பாவாடையும் ,இளம் பச்சை நிற தாவணியுமாய் கொஞ்சம் அதிகம் அழகாக தெரிந்தாள் ...அவள் தனது  நீளமான ஜடையை  இடது தோளில் போட்டு,தன் கைகளால் தனது நெற்றி முடியை தள்ளியபடி,
அவனை ஒருமுறை பார்த்தாள்..பின்னர்,

"உனக்கொரு விஷயம் தெரியுமா??ஒரு முறை ஒரு பிராமணர் ஒருவர் தனக்கு உயர்ந்த ஞானம் கிடைக்கனும்னு ,இந்த திருவானைக்கா கோவிலில் ஒன்பது வாரம் ,இரவும் பகலும் ஓயாமல் அகிலண்டேஸ்வரியை நெனச்சு தவமாய் தவம் இருந்தாராம் .."

அவள் பேசுவதை கவனித்துக் கொண்டு தானிருந்தான்..ஆனால் அவள் எதை பற்றி பேசுகிறாள் என்பதை மட்டும் கவனிக்க மறந்து, அவள் விழிகளை பார்த்தபடி,

"சில டைம்ல நீ கூட அழகா தெரியுற டி " என்று மனதுக்குள் முணுமுணுத்தான்..

அவன் கவனிக்கவில்லையோ என்று நினைத்தவள்,
"டேய்..கேக்குறியா இல்லையா??" என்றாள்.

"ம்ம்,,சொல்லு சொல்லு.."

"அப்றோம் ஒரு நாள் கோயில்லையே தூங்கிட்டாராம் அந்த பிராமணர்..அப்போ அங்க வெள்ளை புடவை கட்டிட்டு வந்த ஒரு பெண், அவரை எழுப்பி அவர் வாயை திறக்க சொல்லி, அவரது வாயில் உமிழ்ந்தாளாம்..அதுக்கப்புறம் அந்த பிராமணர் கவிதை மழையா பொழிந்தாராம்..அதனால அவருக்கு காளமேக புலவர்னு பெயர் வந்துச்சாம்..வந்த பொண்ணு யார் தெரியுமா?" 

என்று அவள் முடிப்பதற்குள்,

"நீ எந்த மாதிரி பையன கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுற?"  என்றான் கார்த்தி..

"டேய் ...நான் என்ன சொல்லிட்டிருக்கேன் ..நீ என்ன கேக்குற?"

"இல்ல..காது கேட்காதவனா பார்த்து கல்யாணம் பண்ணிகிட்டா உன்ன கடைசி வரை கண் கலங்காம பார்த்துக்குவான்.."

"வாட் ?"

"கதை சொல்லியே கொல்றியே டி"

அவள் திரும்பிக் கொண்டாள்..கோபமாக எழுந்தவளின் ஜடையை பிடித்தான்..

"ஜடைய விடு டா ..இல்லன்னா ஸ்திரீ தோஷம் பீடிக்கும் .."

அம்மா தாயே சபிச்சுடாத..என்றபடி தன் பிடியை தளர்த்தினான்..

புன்னகைத்தபடி "ம்ம்,,அந்த பயம் இருக்கட்டும் .." என்றவள், மீண்டும் அவன் புறம் திரும்பி,

"ஏன்..கார்த்தி..எனக்கொரு டவுட்டு..விருப்பம் இல்லாத பெண்ணின், கூந்தலை தொட்டால் கூட கொடிய பாவங்களுக்கு உள்ளாவார்கள் அப்டின்னு நெறைய புராண கதைகள் சொல்லுது..ஆனா ஏன்..இப்பெல்லாம் .."சற்று நிதானித்தாள்...

சில நொடி அமைதிக்கு பின், "நேற்று கூட நியுஸ் பேப்பர்ல பார்த்தேன்....ஒரு சின்ன குழந்தைய...." என்று எதோ தொடங்கியவளை பேச விடாமல் ,

"பேப்பர்ல சயின்ஸ் ,பாலிடிக்ஸ், விளையாட்டு அது இது ன்னு எவ்ளோ நல்ல விஷயங்கள் வருது ...அதயெல்லாம் விட்டுட்டு உன்ன யாரு அத படிக்க சொன்னது??"என்றான் கார்த்தி..

"பூனை கண்ண மூடிகிட்டா உலகம் இருண்டு போயிடாது கார்த்தி...

"என் மனதின் காதல் புரிந்தும் புரியாதவள் போல் நடிக்கும் நீயும் அந்த பூனை மாதிரி தான்.."என்று மனதுக்குள் நினைத்தபடி.."ஆமா ..நீ மட்டும் என்னவாம்?? " என்று முநுமுனுத்தான்..
"வாட்"

"ம்ம்ம்..ஒண்ணுமில்ல.பேசாம கிரௌண்டுக்கெ போயிருக்கலாம்"என்று நெற்றியை சுழித்தபடி சொன்ன கார்த்திக்கிடம் 

"போக வேண்டியது தானே.." என்ற படி வேகமாக நடந்தாள் தேவி..

தொடரும்...











Sunday 1 March 2015

என் காதல் சொல்ல தேவையில்லை .-5


Episode -5
----------------



"ஏண்டி பைத்தியமா உனக்கு??வயசு பொண்ணு யாராச்சு மொட்டை அடிச்சுக்குவாளா ??" விஜி அக்கா ராதிகாவை அடிக்க தொடங்கினாள்..

ஆம்..பைத்தியம் தான்..அவனுக்கு பிடிக்காத உருவத்தின் நிழல் என்று, தன் நிழலை தானே கல் எறிந்த பைத்தியக்காரி ..என்று உள்ளூர எண்ணிய ராதிகா ,

"இப்போ என்ன ஆயிடுச்சுன்னு அடிக்குற??மொட்டை அடிச்சா முடி வளரும்னு நீ தானே சொன்ன??" என்றாள்..

பின்னர்,அவளை அடிப்பதை நிறுத்தி விட்டு, தன் தலையில் தானே அடித்துக் கொண்டாள் விஜி..

..........................
"ஓ...அப்றோம் என்னாச்சு???" ஆர்வத்தோடு டாக்டர் கேட்க,

"ஐயோ அதுக்கப்புறம் தான் பெரிய சிக்கலே ஆரம்பிச்சுது டாக்டர்.."என்று மீண்டும் தொடர்ந்தாள் ராதிகா..

.............................
ஒரு பெரிய பங்களாவிற்கு ராதிகாவை அழைத்து சென்றாள் விஜி...அங்கே தாடியுடன் ஒரு முதியவர் வரவேற்றார்..ஒரு இஸ்லாமியர் என்பது புரிந்தது..

"தம்பி சொன்ன பொண்ணு இது தானா??"

"ஆமா பாய்"

"பயப்படாதீங்க சரி பண்ணிடலாம்.."

"என்க்கு ஒன்னும் இல்லக்கா ...எதுக்கு என்ன இங்க கூட்டிட்டு வந்திருக்க ??" என்று ராதிகா கேட்பதை  பொருட்படுத்தாமல்,


"நல்ல பொண்ணு பாய் ..இப்போ தான் கொஞ்ச நாளா இப்டி இருக்கா.." என்றாள் விஜி ,அந்த முதியவரிடம்..

அந்த அறையில் சாம்பிராணி புகை காட்டப்பட்டது..பின்னர் அந்த முதியவர் ,ராதிகாவை ஒரு  நாற்காலியில் அமர வைத்து, தன் கட்டைவிரலை அவளது நெற்றியில்  வைத்து அழுத்தி ஏதோ மந்திரங்களை முணுமுணுத்தார்..பின்னர் விஜியை பார்த்து,

நான் சந்தேகப்பட்டது சரியா போச்சு.உங்க பொண்ணு,.ராத்திரி வேளையில தனியா வரும்போது ஏதோ பிடிக்ககூடாதது பிடிச்சிடுச்சு..இத சரி செய்ய முடியும் என்ற படி கொஞ்சம் எலுமிச்சம் பழங்களை கொடுத்தார்..ஒரு காகிதத்தில் ஏதேதோ மந்திரங்கள் எழுதி அதையும் கொடுத்தார்..

"விடியற்காலை நாலு மணிக்கு பச்ச தண்ணில இந்த காகிதத்தில் ஒண்ணை போட்டு, அதில் இருக்கும் எழுத்துக்கள் நீரில் கரைந்ததும் உங்க பொண்ண அதுல குளிக்க வைக்கணும்..தலையில எலுமிச்சம் பழத்த தேய்க்கணும்..குளிச்சு முடிச்சதும் சாம்பிராணி புகை காட்டணும்..இப்டியே தொடர்ந்து 11 நாள் செய்யணும்..பிடிச்சிருக்குற பேய் இறைவன் அருளால் தானாவே விலகிடும்.." என்றதோடு நிறுத்தாமல்...அதற்கு கட்டணமாக ஆறாயிரம் ரூபாயை வாங்கிக்கொண்டார் அந்த முதியவர்..

-----------------------------------
"கடந்த ஒரு வாரமா என்ன இப்டி சித்ரவதை பண்றா எங்க அக்கா..இப்டியே விட்டா நான் நெஜமாவே பைத்தியம் ஆயிடுவேனொன்னு பயமா இருக்கு டாக்டர்.."விவரித்து முடித்தாள் ராதிகா..

ஏம்மா.பொண்ணு பாக்குறது அப்டிங்குறது சாதாரண விஷயம்..அதுக்கு போயி யாராவது மொட்டை அடிச்சுக்குவாங்களா ???இதெல்லாம் பேசியே புரிய வச்சிருக்கலாமே .."

"ம்ம்..புரிய வைக்க முடியாது டாக்டர்..நான் லவ் பண்றேன்..என்னை என் கண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைங்க அப்டின்னு என்னால கேட்க முடியாது..ஏன்னா..கண்ணனுக்கு தான் என்ன பிடிக்கலியே..என்னோடயது ஒரு தலை காதல்  தான்... ஆனா அதுவும்  காதல் தானே..என்னால இன்னொரு ஆணின் பார்வையை கூட ஏற்க முடியாது டாக்டர்..

"வெல்..ஒரு பொண்ணு நடந்து போனா அவளை பசங்க திரும்பி பார்க்குறதும்..ஒரு ஆணை பெண் திரும்பி பார்ப்பதும் இயல்பு..எந்த ஆணும் என்னை பார்க்கவே கூடாதுன்னு சொல்ற அளவுக்கு மனச குழப்பி வச்சிருக்கீங்க ...ரெண்டு கை தட்டினா தான் சத்தம் வரும்..காதலும் அப்டி தான்...ஒரு தலை காதலுக்கெல்லாம் இவ்ளோ feel பண்ணினா ஆபத்து உனக்கு தான்..."இன்னும் என்னென்னவோ அறிவுரை சொன்னார் டாக்டர்..

காதலுக்கு கண் இருக்கோ இல்லையோ ...நிச்சயம் காதுகள் கிடையாது..யாரவது அறிவுரை சொல்ல வந்தால் ,உண்மையான காதல் மட்டும் காதுகளை கழற்றி ஒரு ஓரமாய் வைத்து விட்டு தான் அறிவுரை கேட்கும்....தொட்ட பின் பாம்பென்றும் சுட்ட பின் நெருப்பென்றும் ,பட்ட பின் தெரிந்து கொண்டேன் என்று கண்ணதாசன் சொன்னது காதலுக்கும் பொருந்தும்..சோ, பட்டு திருந்துவது காதலுக்கு அழகு...
காதல் ஒரு வேளை காரண பெயராக கூட இருக்கலாம்..காது+இல் என்பது தமிழ் இலக்கணப்படி ஒரு வேளை 'இ'கரம் 'அ'கரமாகி த்+உ வில் ஈறு கெட்டு...ஐயோ இது என்ன தமிழ் கொலை ...தமிழறிஞர்கள் படித்தால் எனக்கு தூக்கு தண்டனை கிடைக்குமோ???

எது எப்படியோ டாக்டர் சொன்ன அறிவுரை எதுவும் ராதிகாவை அடையவில்லை..

"இங்க பாரும்மா..இப்போதைய சூழ்நிலையில் நீங்க உங்க அக்காவ விட்டு தனியா இருக்குறது தான் நல்லது..ஆபீஸ்ல ட்ரெய்னிங் ஓவர் ..சோ போஸ்டிங் எங்க?"

"ஹைதராபாத் " டாக்டர்..

"ம்ம்ம்..தேட் இஸ் பெட்டெர் ....இந்த விசிடிங் கார்ட வச்சுக்கோங்க ..ஹைதராபாத் குக்கட்பள்ளில என் அண்ணா ஒருத்தர் ஸ்கூல் நடத்துறார்..அங்கே பேயிங் கெஸ்டா நீங்க வேணும்னா தங்கிக்கோங்க..நான் அவரு கிட்ட சொல்லி வக்கிறேன்..எதாச்சு ஹெல்ப் வேணும்னா என்னை காண்டாக்ட் பண்ணுங்க.."

"தேங்க்ஸ் "டாக்டர்..

.........................................................

தொடரும்..